எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை 22 ம் திகதி முதல் 4 மணி நேரம் நீர் வெட்டு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் நீரை சிக்கனமாக பாவிக்குமாறு தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைடைந்து செல்லுகின்றது . இந்த நிலையில் தொடர்ச்சியாக நீர் வளங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் 22 நாளை முதல் காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை நாளாந்தம் நீர் வெட்டை மேற்கொள்ளுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை வழமைக்கு திரும்பும் வரை நீர் பாவனையாளர்கள் நீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்வதோடு அதனால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம் என அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதேவேளை தற்போது உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வரலாற்றில் முதல் தடவையாக 10 அடியாக குறைந்துள்ளதுடன். தற்போது மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை என வானிலை அவதானிப்பு நிலையத்தினர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

