இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனமான ‘ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ்’ நிறுவனத்திடமிருந்து இரண்டு MQ-9B ‘சீ கார்டியன்’ (Sea Guardian) ரக அதிநவீன டிரோன்களை குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்திய கடற்படை கையெழுத்திட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் தலைமை இயக்குநர் (கொள்முதல்) முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 1,943 கோடி ரூபாய் (30 மாத காலத்திற்கு) என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக உயரத்தில் தொடர்ச்சியாக 35 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானங்கள், நான்கு ‘ஹெல்ஃபயர்’ ஏவுகணைகளையும் சுமார் 450 கிலோ எடையுள்ள குண்டுகளையும் சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டவை.
ஏற்கனவே இந்திய கடற்படை இரண்டு சீ கார்டியன் டிரோன்களைக் குத்தகை அடிப்படையில் வெற்றிகரமாக இயக்கி வரும் நிலையில், அமெரிக்காவிடமிருந்து 4 பில்லியன் டாலர் மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் 31 டிரோன்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே, அவசரத் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த கூடுதல் குத்தகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிநவீன சென்சார்கள் மற்றும் ரேடார் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிரோன்கள், பரந்த கடல் பரப்பில் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் மற்றும் உளவுத் தகவல்களைச் சேகரித்தல் போன்ற முக்கியப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளன.
சீனா மற்றும் அண்டை நாடுகளின் கடல்சார் சவால்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்திய பெருங்கடல் பகுதியில் எந்தவொரு அசம்பாவிதத்தையும் உடனுக்குடன் கண்டறிந்து பதிலடி கொடுக்க இந்த டிரோன்கள் நாட்டின் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

