அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமான பவல் ஏரியின் (Lake Powell) நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளதால், அமெரிக்காவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் கடுமையான நீர்வள மற்றும் மின்சார நெருக்கடி உருவெடுத்துள்ளது.
பவல் ஏரியுடன் இணைந்து செயல்படும் மற்றொரு முக்கிய நீர்த்தேக்கமான மீட் ஏரியின் (Lake Mead) நீர்மட்டமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
காலநிலை மாற்றம், தொடர்ச்சியான வறண்ட குளிர்காலம் மற்றும் அளவுக்கு அதிகமான நீர் பயன்பாடு ஆகியவையே இந்த நிலைக்கு முதன்மை காரணங்களாகக் சுட்டிக்காட்டப்படுகின்றன.
அமெரிக்க மீள்குடியேற்றப் பணியகத்தின் (USBR) தரவுகளின்படி, பவல் ஏரியின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 3,519.91 அடியாகக் குறைந்துள்ளது.
இது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விட 20 அடிக்கும் அதிகமான வீழ்ச்சியாகும். நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் மேலும் 30 அடி குறைந்தால், கிளென் கேன்யன் அணையில் (Glen Canyon Dam) அமைக்கப்பட்டிருக்கும் மின் உற்பத்திக்கான டர்பைன்கள் செயல்பட முடியாத நிலை ஏற்படும்.
இதனால், அணை மூலம் விநியோகிக்கப்படும் நீர்மின்சார உற்பத்தி முற்றிலும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
கொலராடோ ஆற்றுப் படுகையை நம்பியுள்ள கலிபோர்னியா, அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, யூட்டா, வயோமிங் மற்றும் கொலராடோ ஆகிய 7 அமெரிக்க மாநிலங்களில் வாழும் 4 கோடிக்கும் அதிகமான மக்களுக்கும், அங்குள்ள விவசாயம் மற்றும் வனவிலங்குகளுக்கும் இந்த வறட்சி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலமையைச் சமாளிக்கும் வகையில், நீர் விநியோகத்தைக் கணிசமாகக் குறைக்கும் 10 ஆண்டு கால அவசரக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமெரிக்க அரசு முன்மொழிந்துள்ளது.
மேலும், ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் படகு இறங்குதளங்கள் மூடப்பட்டு, பிராந்திய சுற்றுலாத் துறையும் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகிறது.

