கியூபெக்கில் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு, தனிநாடு கோரும் பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois – PQ) கட்சியின் தலைவர் போல் சென்-பியர் பிளமோண்டன் (Paul St-Pierre Plamondon), அம்மாநிலத்தில் வாழும் ஆங்கில மொழிபேசும் Anglophones வாக்காளர்களைக் கவரும் வகையில் பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிபேசும் மக்கள் இருசாராரும் ஒரே மாதிரியான வாழ்வாதாரச் சவால்களையே எதிர்கொள்கின்றனர் என்று அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேஷனல் போஸ்ட் (National Post) நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தக்கடிதத்தில், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் பேசும் கியூபெக்வாசிகளின்
அக்கறைகளும் கவலைகளும் முற்றிலும் வேறுபட்டவை என்ற தவறான நம்பிக்கையை, பொது விவாதங்கள் தேவையின்றி ஊக்குவித்து
வந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வாழ்க்கைச் செலவு உயர்வு, சொந்தமாக வீடு வாங்குவதில் உள்ள சிரமங்கள், சுகாதாரம் மற்றும் கல்வியமைப்பில் நிலவும் நெருக்கடிகள்போன்றவை இரு சமூகத்தினரையும் சமமாகப் பாதிப்பதாகப் பிளமோண்டன் குறிப்பிட்டுள்ளார்.அதேசமயம், கியூபெக்கில் அவரது கட்சி ஆட்சி அமைத்தால் ”கியூபெக் தனிநாடு” தொடர்பாகப் புதிய பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்தப்படும் என்ற தமது கட்சியின் முக்கிய வாக்குறுதியை இந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.
மாறாக, கியூபெக்கிற்கு ஒரு திறமையான, நேர்மையான மற்றும் மக்களுக்குப் பொறுப்புக்கூறும் அரசாங்கத்தை வழங்குவதே தேர்தலின் முதன்மை வினாவாக இருக்கும் என்று பிளமோண்டன் குறிப்பிட்டுள்ளார்.மேலும், நாங்கள் கட்டியெழுப்பும் சுதந்திர கியூபெக் நாட்டில், வரலாற்றுச்சிறப்புமிக்க ஆங்கில மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள கியூபெக் மாகாண சபைத்தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அண்மைய
கருத்துக்கணிப்புகளில் ஆளும் கூட்டணி அவெனீர் கியூபெக் (CAQ) மற்றும் கியூபெக் லிபரல் கட்சி' (PLQ) ஆகியவற்றை விட பார்ட்டி கியூபெக்வா கட்சி முன்னணி வகித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

