கிளிநொச்சி மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் உட்பட்ட நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் இயங்கும் நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் நீர்ப்பாசனக் குளங்களில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் தடுப்பு வலைகள் வழங்கப்பட்டன.
குறித்த வலைகள் வழங்கும் நிகழ்வு, பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்க அலுவலகத்தில், யாழ் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர்ப்பாசனக் குளங்களில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து வான்பாயும் காலப்பகுதிகளில், நீருடன் சேர்ந்து மீன் குஞ்சுகள் வெளியேறிச் செல்வதால் மீன்வள உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.
இதனைத் தடுக்கும் நோக்கில், குளங்களிலிருந்து மீன் குஞ்சுகள் வெளியேறிச் செல்லும் இடங்களில் பொருத்துவதற்காக இந்த தடுப்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குளங்களில் வளர்க்கப்படும் மீன்குஞ்சுகளைப் பாதுகாத்து, எதிர்காலத்தில் மீன்வள உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கங்களுக்கு மொத்தமாக 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தடுப்பு வலைத் தொகுதியினதும் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அமைச்சின் இணைப்பாளர் வல்லிபுரம் அற்புதராசா, பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்க அலுவலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த தடுப்பு வலைகள் வழங்கப்படுவதன் மூலம், நீர்ப்பாசனக் குளங்களில் வளர்க்கப்படும் மீன் குஞ்சுகளைப் பாதுகாப்பதுடன், மீனவர் சங்கங்களின் வாழ்வாதாரத்தையும் மீன்வள உற்பத்தியையும் மேம்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

