பீகார் மாநிலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமுல்படுத்தப்பட்ட மதுவிலக்கு கொள்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதிலும் குடும்ப வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதிலும் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மன்றம் (NCAER) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொருளாதார நிபுணர் ரத்னா சஹாய் தலைமையிலான குழு நடத்திய ஆய்வின்படி, 2016-க்குப் பிந்தைய காலகட்டத்தில் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பதிவான குற்றங்கள் குறையவில்லை என்றும், மாறாக சட்டவிரோதக் கள்ளச்சாராய வர்த்தகம் மற்றும் மாற்று போதைப்பொருட்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டதன் காரணமாகக் குடும்பங்களின் பொருளாதாரம் மேம்படும் என்றும், மதுவுக்காகச் செலவிடப்பட்ட தொகை பயனுள்ள தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டவிரோத மது வர்த்தகம் பெருகியதால் குற்றங்களும் ஊழலும் அதிகரித்துள்ளன.
மேலும், இந்தத் தடையைக் கண்காணிப்பதற்கும் கடத்தலைத் தடுப்பதற்கும் அரசு பெருமளவில் நிதி செலவிட்ட போதிலும், பலன் எதுவும் கிடைக்காமல் மாநிலத்தின் நிதி நிலைமை மோசமடைந்துள்ளது. மதுவிலக்குக்கு முன்பு வரை மாநிலத்தின் சொந்த வருவாயில் சுமார் 14 சதவீதமாக இருந்த கலால் வரி வருவாய் இதனால் முற்றிலுமாக இழக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகவும், ஏழ்மையான மாநிலமாகவும் நீடிக்கும் பீகாரில், மதுபானங்கள் மீதான கலால் வரியை மீண்டும் அமுல்படுத்தினால் மாநிலத்தின் வருவாயை 14 முதல் 15 சதவீதம் வரை உடனடியாக அதிகரிக்க முடியும் என்றும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மதுவிலக்கு அதன் முதன்மை நோக்கத்தை அடையத் தவறியுள்ளதால், மதுபான விற்பனையை மீண்டும் சட்டப்பூர்வமாக்கி, அதன் மூலம் கிடைக்கும் நிதி ஆதாரங்களை மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கோரி பொருளாதாரச் சிந்தனைக் குழு தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளது.

