மத்திய அரசு அணுவாயுதங்களுக்கு எதிரான தனது அதிகாரப்பூர்வ கொள்கையில் தொடர்ந்து உறுதியாக இருந்தபோதிலும், நாட்டின் உள்நாட்டு அணுசக்தித் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய சுத்திகரிப்பு திட்டங்களால், அணு குண்டை உருவாக்கும் திறன் கொண்ட நாடாக கனடா
மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக அணுசக்தி நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அணுசக்தித் தொழில், சொந்தத் தொழில்நுட்பம், புளுட்டோனியம் மற்றும் டிரைட்டியத்தை உருவாக்கும் கனநீர் உலைகள் (Heavy-water reactors) மற்றும் நாட்டின் ஏராளமான யுரேனியக் கையிருப்பு முதலான காரணிகள், அணுவாயுதத்தை உருவாக்குவதற்குத் தேவையான மிக முதன்மையான இடத்திற்கு கனடாவை உயர்த்தியுள்ளன.
நாட்டில் தற்போது புதிய சிறிய ரக அணு உலைகளுக்கு தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதா என்பது குறித்து மத்திய அரசு முக்கிய முடிவொன்றை எதிர்கொண்டுள்ளது.
வொஷிங்டன் வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகாரங்களின் முன்னாள் தலைவரும் அணுவாயுத நிபுணருமான ஸ்டீவ் ஃபெட்டர் (Steve Fetter) இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “கனடா அணுவாயுத தயாரிப்பில் இறங்குவதைத் தடுக்கும் ஒரே காரணி, அதைச் செய்வதற்கான அரசியல் முடிவும் விருப்பமும் மட்டுமே” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது ‘மேன்ஹேட்டன் திட்டத்தில்’ (Manhattan Project) கனடாவும் முக்கியப் பங்கு வகித்த வரலாற்று பின்னணியை நினைவுகூர்ந்த அவர், கனடாவிடம் அணுவாயுதங்களை உருவாக்கத் தேவையான அத்தனை தொழில்நுட்பமும் ஆட்களும் ஏற்கனவே தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ‘கேமகோ’ (Cameco) நிறுவனம் தற்போது யுரேனியத்தை அதிவேகமாகவும் திறம்படவும் செறிவூட்டும் ‘சைலெக்ஸ்’ (SILEX) எனும் லேசர் அடிப்படையிலான புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது.
வழக்கமான மையவிலக்கு (Centrifuge) முறைகளை விட மிகக் குறைந்த இடத்திலும், குறைந்த ஆற்றலிலும் அணுப் பொருட்களைச் செறிவூட்ட இந்த முறை வழிவகுக்கும் என்பதால், இரகசியமாக அணுவாயுதங்களை உருவாக்கும் சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கனடாவின் புதிய அணுசக்தி உத்தி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இறக்குமதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடிகள் காரணமாக உள்நாட்டுச் செறிவூட்டல் வசதிகளை ஏற்படுத்துவது கனடாவின் உத்திசார் சுயசார்பை (Strategic autonomy) அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

