மொன்றியலில் நடைபெறவுள்ள ‘ஃபியெர்டே மொன்றியல்’ (Fierté Montréal) பிரைட் திருவிழாவின் பாதுகாப்பை மேலும் தீவிரப்படுத்துவதற்கு, ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற ‘பிரைட்’ (Pride) விழாவில் வாகனத்தை மோதி நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 29 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் இடம்பெற்ற இச்சம்பவம் உலகெங்கிலும் உள்ள 2SLGBTQ+ சமூகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் ‘கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே’ (Christopher Street Day) பிரைட் கொண்டாட்டங்களின் போது, கூட்டத்திற்குள் வேன் ஒன்றை அதிவேகமாகச் செலுத்தியே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 29 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் தீவிரவாத பின்னணியைக் கொண்டது என ஜெர்மன் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி, நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள மொன்றியல் பிரைட் பேரணிக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லின் தாக்குதலுக்கு ஆழ்ந்த இரங்கலையும் 2SLGBTQ+ சமூகத்தினருக்கான தங்களின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ள ‘ஃபியெர்டே மொன்றியல்’ அமைப்பின் இடைக்கால நிர்வாக இயக்குநர் ஹிஜினோ மொன்டேரோ (Higino Monteiro), மொன்றியல் பொலிஸ்
திணைக்களத்துடன் (SPVM) இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மொன்றியலில் பிரைவேட் பார்ட்டி மற்றும் பேரணிகளை ஒருங்கிணைக்கும் ‘வைல்ட் பிரைட்’ (Wild Pride) அமைப்பின் நிர்வாகி ரோமேன் மேத்யூ (Romain Matthieu) இது குறித்துக் கூறுகையில், விழா நடைபெறும் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.
கனடாவில் 2SLGBTQ+ சமூகத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், பெர்லின் தாக்குதலானது விழா ஏற்பாட்டாளர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அமைப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

