டொராண்டோ நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் (U.S. Consulate) வெளிப்புறப் பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, டொராண்டோ பொலிஸ்துறையினர் அப்பகுதியை முழுமையாக முடக்கி தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று அதிகாலை 4:45 அளவில் யுனிவர்சிட்டி அவென்யூ மற்றும் ஆர்முரி வீதிக்கு இடைப்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சத்தம் கேட்டதாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட சோதனையின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து வெள்ளை நிற ‘செடான்’ (Sedan) ரகக் கார் ஒன்று அதிவேகமாகத் தப்பிச் சென்றதை சாட்சிகள் பார்த்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சந்தேகநபர்கள் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. சம்பவ இடத்தைச் சுற்றிப் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தடயவியல் நிபுணர்களின் வாகனங்கள் உட்பட 12க்கும் மேற்பட்ட பொலிஸ் ரோந்து வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, யுனிவர்சிட்டி அவென்யூவின் தெற்கு நோக்கிய பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுப் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
கனடாவுக்கான அமெரிக்கத் தூதரகக் கட்டடத்தை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பதைப் பொலிஸார் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத போதிலும், கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதியும் இதே தூதரகக் கட்டடம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
தற்போது நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் அதே பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

