உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 190 புதிய போர்க் கவச வாகனங்களை (ACSVs) கொள்வனவு செய்வதற்கான 2 பில்லியன் டொலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் பிரதமர் மார்க் கார்னி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கனேடிய ஆயுதப் படைகளை நவீனமயப்படுத்துவதற்கும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகவே, போர்க் கவச வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
ஒன்றாரியோ மாகாணத்தின் லண்டன் நகரில் அமைந்துள்ள ‘ஜெனரல் டைனமிக்ஸ் லேண்ட் சிஸ்டம்ஸ்-கனடா’ (GDLS-Canada) தொழிற்சாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, பிரதமர் மார்க் கார்னி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“கனேடிய ஆயுதப் படைகளுக்குத் தேவையான உபகரணங்களை அவர்கள் விரும்பும் நேரத்தில் தங்குதடையின்றிக் கிடைக்கச் செய்வதே தமது நோக்கம்” என்று பிரதமர் கார்னி இதன் போது சுட்டிக்காட்டினார்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 பில்லியன் டொலர் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம், கனேடிய இராணுவத்தின் ஒட்டுமொத்த போர் ஆதரவு கவச வாகனங்களின் எண்ணிக்கை 360இலிருந்து 550 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கம் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்திய புதிய ‘பாதுகாப்புத் தொழில்துறை மூலோபாயத்தின்’ (Defence Industrial Strategy) கீழ், கையெழுத்திடப்பட்ட முதலாவது முக்கிய ஒப்பந்தம் இதுவாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

