அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் ‘சைக்ளோஸ்போரா’ (Cyclospora) எனப்படும் ஆபத்தான ஒட்டுண்ணியால் பரவும் வயிற்றுப்போக்கு நோய் மிக வேகமாகப் பரவி வரும் போதிலும், தற்போதைய நிலவரப்படி இந்தத் தொற்று கனடாவிற்குள் பரவவில்லை என்று கனடாவின் பொதுச் சுகாதார முகமை (PHAC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மிச்சிகன் மாநிலத்தில் கடந்த வாரம் 170 பேருக்கு மாத்திரமே உறுதி செய்யப்பட்டிருந்த இந்த ஒட்டுண்ணித் தொற்று (Cyclosporiasis), தற்போது 1,250 க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் சுமார் 260 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு, மிக குறுகிய காலத்தில் பாதிப்பு எண்ணிக்கை தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டொராண்டோவின் பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பு (University Health Network) தொற்றுநோய்ப் பிரிவின் தலைவர் சுசி ஹோட்டா (Dr. Susy Hota) இது குறித்து விளக்குகையில், “மிச்சிகனில் ஒட்டுண்ணித் தொற்று ஏற்பட்ட உணவுப் பொருட்கள் அங்கேயே உள்ளூர் மட்டத்தில் விநியோகிக்கப்பட்டதாகவோ அல்லது தயாரிக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
கனடாவின் பொதுச் சுகாதார முகமையின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஜான்சன் (Mark Johnson) கருத்துத் தெரிவிக்கையில், கனடாவில் தற்போது சைக்ளோஸ்போரா ஒட்டுண்ணிப் பரவல் தொடர்பாக எந்தவொரு விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், நாட்டின் குடிநீர் விநியோகக் கட்டமைப்பில் இந்த ஒட்டுண்ணி கலப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
