கியூபெக் மாகாணத்தில் நுகரப்படும் ஒட்டுமொத்த ஆற்றலில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கீட்டை எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த 25 ஆண்டு கால பிரம்மாண்ட வள மேலாண்மைத் திட்டத்தை கியூபெக் மாகாண அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மொன்றியலுக்கு வடகிழக்கே உள்ள வாரென்ஸ் நகரில் நடைபெற்ற உத்தியோகபூர்வ செய்தியாளர் சந்திப்பில், கியூபெக்கின் எரிசக்தித் துறை அமைச்சர் பெர்னார்ட் ட்ரெய்ன்வில் (Bernard Drainville) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நீண்டகாலப் பொருளாதார மூலோபாயத்தை வெளியிட்டார்.
தற்போது மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு 48 சதவீதமாக மட்டுமே உள்ள நிலையில், அதனை 77 சதவீதமாக மாற்றுவது மிகவும் சவாலான மற்றும் லட்சிய இலக்கு (Ambitious goal) என்று அமைச்சர் விவரித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம், தற்போது 52 சதவீதமாக உள்ள கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களின் (Fossil fuels) பயன்பாடு, வரும் 2050-க்குள் 23 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று, கியூபெக் அரசு அறிவித்துள்ளது.
இந்த மாபெரும் இலக்கை அடைவதற்கு மாகாண அரசு மற்றும் பொதுத்துறை பங்களிப்புடன் 87 பில்லியன் கனேடிய டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன.
கியூபெக் மாகாணத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தத் திட்டத்தை வரவேற்றுள்ள அதே வேளையில், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் காற்றாலை மற்றும் சூரியசக்தித் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


