மேற்கு கியூபெக் பகுதியில் உள்ள ‘சென்டர் வோர்லேஜ்’ (Centre Vorlage) பனிச்சறுக்கு விளையாட்டுக் மையத்தில், பள்ளிச் சுற்றுலாவின் போது நேர்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 வயது கனேடியச் சிறுமி மேகன் பெல்லின் (Megan Bell) பெற்றோர், விபத்து நடந்த தினத்தில் வழங்கப்பட்ட அவசரக் கால முதலுதவிகள் குறித்துப் பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
ஒட்டாவாவின் தென்கிழக்கு கிராமப்புறப் பகுதியான மெட்காஃப் (Metcalfe) பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி மேகன் பெல், கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி தனது பள்ளியிலிருந்து கியூபெக்கில் உள்ள ‘சென்டர் வோர்லேஜ்’ பனிச்சறுக்குத் தளத்திற்குச் சுற்றுலா சென்றிருந்தார்.
அங்கே விபத்து நடந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரது பெற்றோரான ஜென்னி பெல் மற்றும் ஆலிவர் பெல் ஆகியோர், தங்களின் மகள் இறப்பிற்கு நீதி கேட்டு முதன்முறையாக ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளனர்.
மலையின் உச்சியில் விபத்து நேர்ந்த போது, மேகனை ஏன் உடனடியாக அதிகாரிகளால் மீட்க முடியவில்லை? என்றும் பனிச்சறுக்குத் தளத்தில் அவசர காலத்திற்கான பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் நெறிமுறைகள் என்னென்ன? என்றும் அந்தப் பெற்றோர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேகன் பெல் என்ற அந்த உயிரிழந்த சிறுமி பனிச்சறுக்கு விளையாட்டில் நன்கு பழகியவர் என்பதும், கடந்த மூன்று ஆண்டுகளாகப் பள்ளிச் சுற்றுலாக்கள் மூலம் இதே வோர்லேஜ் மையத்திற்கு வந்து சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


