அரசாங்கத்தினால் அல்லது அரசாங்கத் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் ஊடக அறிக்கைகள் அல்லது விமர்சனங்கள் ஊடாக, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலும், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பிற்குப் பாதகம் விளைவிக்கும் வகையிலும் கருத்துக்கள் வெளியிடப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவை சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகக் கட்டமைப்பையும் பாதுகாப்பதற்கான தவிர்க்க முடியாத தூண்களாகும்.
எனவே, நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுவதுடன், அது எவ்வித அழுத்தங்களுக்கும் அல்லது தலையீடுகளுக்கும் உட்பட்டிருக்கவில்லை என்பதை பொதுமக்கள் உணரும் வகையில் அதன் செயற்பாடுகள் அமைந்திருப்பது மிக முக்கியமானது என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது


