மொண்ட்ரியல் – ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள திடீர் இணையச் சேவை முடக்கம் காரணமாக, நாட்டின் முதன்மை விமான சேவை நிறுவனமான ‘ஏர் கனடா’ (Air Canada) நிறுவனத்தின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏர் கனடா நிறுவனத்தின் கணினி வழிச் சேவைகள், பயணச்சீட்டு சரிபார்ப்பு மற்றும் பயணப்பொதி விபரப் பதிவுகள் உள்ளிட்ட முக்கியப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால் விமான நிலைய முனையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ளும் பொருட்டு, மொண்ட்ரியல் விமான நிலையத்திற்குப் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகள் அனைவரும், தங்களது இருப்பிடங்களை விட்டுப் புறப்படுவதற்கு முன்னதாகவே தங்களது மொபைல் செயலிகள் அல்லது வீட்டு இணையம் வழியாக ‘டிஜிட்டல் செக்-இன்’ (Check-in) நடைமுறைகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு ஏர் கனடா நிறுவனம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.
விமான நிலையத்தின் இணையச் சேவை துண்டிக்கப்பட்டதை அடுத்து, மொண்ட்ரியல் விமான நிலைய ஆளுமை அமைப்பு (Aéroports de Montréal) மற்றும் ஏர் கனடா தொழில்நுட்பக் குழுவினர் இணைந்து, சேவைகளை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, ஏற்கனவே இணையம் வழியாக செக்-இன் செய்து, தங்களின் போர்டிங் பாஸ்களை மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள பயணிகள், எவ்விதத் தடையுமின்றி பாதுகாப்புச் சோதனைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படுவதாக ஏர் கனடா விமானச்சேவை நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு எப்போது முழுமையாகச் சரிசெய்யப்படும் என்ற துல்லியமான கால அவகாசம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மொண்ட்ரியல் விமான நிலையத்திலிருந்து பயணங்களை மேற்கொள்ளவிருக்கும் பயணிகள், வழக்கமாக வரும் நேரத்தை விட, முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருவது பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


