மொண்ட்ரியல் நகரின் ‘வெஸ்ட் ஐலாண்ட்’ (West Island) பிராந்தியத்தை நிலைகுலையச் செய்த திடீர் பெருவெள்ளத்தின் பாதிப்புகளிலிருந்து, அப்பகுதி மக்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
மொண்ட்ரியல் நகரின் வெஸ்ட் ஐலாண்ட் பிராந்தியத்தில் உருவான அதிவேகக் கடுமையான இடியுடன் கூடிய சூறாவளி காரணமாக, சில மணிநேரங்களிலேயே 100 முதல் 150 மில்லிமீற்றர் (mm) வரையிலான மழை பொழிந்துள்ளது.
இந்த திடீர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் 20,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஒட்டுமொத்தமாக இருளில் மூழ்கின. மொண்ட்ரியல் தீவின் பியர்ஃபாண்ட்ஸ்-ராக்ஸ்போரோ (Pierrefonds- Roxboro) மற்றும் டோலார்ட்-டெஸ்-ஒர்மோக்ஸ் (Dollard-des-Ormeaux) ஆகிய இரண்டு முக்கியப் பகுதிகளே இந்த இயற்கைச் சீற்றத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ள நீர் மிக வேகமாகச் சாலைகளில் பாய்ந்தோடியதால், வாகனங்களை இயக்க முடியாமல் நடுவழியில் சிக்கிக்கொண்ட 12-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டனர்.
இப்பகுதியில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளின் அடித்தளங்களுக்குள் (Basements) வெள்ள நீர் புகுந்ததால் உடமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
பியர்ஃபாண்ட்ஸ் பிராந்தியத்தில் வசிக்கும் 181 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டு, அங்குள்ள விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள பாதிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் காரணமாக பியர்ஃபாண்ட்ஸ் நூலகம், கலாசார மையம் மற்றும் மார்செல்-மோரின் சமூக நலக் கூடம் உள்ளிட்ட பல நகராட்சி கட்டிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.


