கியூபெக் மாகாணத்தின் பிரெஞ்சு மொழி விவகாரங்களுக்கான அமைச்சர் ஜீன்-பிரான்சுவா ராபெர்ஜ் (Jean-François Roberge) ‘மசோதா 8’-இனை கியூபெக் தேசிய சட்டமன்றத்தில் (National Assembly) சமர்ப்பித்துள்ளார்.
இந்த புதிய சட்ட வரைவின்படி, கனடாவில் ஆங்கில வழிக் கல்வி கற்பதற்கான உத்தியோகபூர்வ ‘தகுதிச் சான்றிதழ்’ (Certificate of Eligibility) இல்லாத எந்தவொரு வயது வந்த மாணவரும், இனி ஆங்கிலேயக் கல்விச் சபைகளின் கீழ் இயங்கும் தொழிற்கல்வி மற்றும் முதியோர் கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில முடியாது.
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, தற்போது ஆங்கிலேயத் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் மாணவர்களில் சுமார் 75 சதவீதத்தினர் இந்த புதிய விதியின் கீழ் ஆங்கிலத்தில் கல்வி கற்கும் தகுதியை உடனடியாக இழந்து, பிரெஞ்சு மொழி கல்வி முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதுவரை கியூபெக்கில் உள்ள தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், அண்மையில் முன்-பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கும் மட்டுமே பொருந்தும் வகையில் செயற்பட்டு வந்த ‘பிரெஞ்சு மொழி சாசனம்’ (Charter of the French Language), தற்போது முதல்முறையாக முதியோர் மற்றும் தொழிற்கல்வித் துறைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் பெற்றோர் எவரேனும் ஒருவர் ஆங்கில வழிக் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அவர்களின் பிள்ளைகளுக்கு இந்த ‘தகுதிச் சான்றிதழ்’ (COE) வழங்கப்படும். இந்த சான்றிதழ் இல்லாத புலம்பெயர்ந்த புதுக்குடிமக்கள் (Newcomers) மற்றும் இதர மாணவர்கள் இனி பிளம்பிங், தச்சு வேலை, சமையல் கலை,
கணக்குப்பதிவியல் போன்ற தொழிற்கல்விகளைப் பிரெஞ்சு மொழியிலேயே பயில வேண்டும். “கியூபெக்கில் பிரெஞ்சு மொழியின் வீழ்ச்சியைத் தடுப்பதே தமது முதன்மை இலக்கு எனத் தெரிவித்துள்ள மாகாணக் கல்வி அமைச்சர் சோனியா லெபெல் (Sonia Lebel), கியூபெக்கிற்கு வருபவர்கள் பிரெஞ்சு மொழியிலேயே வாழவும், வேலை செய்யவும், பொருளாதார ரீதியாக வளரவும் பழக வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த மசோதாவிற்கு கியூபெக் ஆங்கிலேயப் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் மொண்ட்ரியல் ஆங்கிலேயக் கல்விச் சபை (EMSB) ஆகிய அமைப்புகள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
கியூபெக் மாகாணம் ஏற்கனவே சுகாதாரம், கட்டுமானம், முதியோர் பராமரிப்பு மற்றும் நிர்வாகத் துறைகளில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையைச் (Labour Shortages) சந்தித்து வருகிறது.
இந்த நேரத்தில் தகுதியான தொழிலாளர்களை உருவாக்கும் ஆங்கிலேயத் தொழிற்கல்வி நிலையங்களை முடக்குவது, கியூபெக் மாகாணப் பொருளாதாரத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என, ஆங்கிலேயக் கல்விச் சபைகளின் கூட்டமைப்புத் தலைவர் ஜோ ஓர்டோனா (Joe Ortona) குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மொழித் தடையின் காரணமாக 65% முதல் 70% வரையிலான முதியோர் மற்றும் பகுதிநேர மாணவர்கள் தங்களது படிப்பை பாதியிலேயே கைவிடும் (Drop out) அபாயம் உள்ளதாகவும், இதனால் கல்விச் சபைகளுக்கு ஆண்டுதோறும் 15 மில்லியன் டொலர் வரை நிதி இழப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


