கனடாவும் பிரான்சும் அதிமுக்கியத் துறைகளின் உத்தியோகபூர்வ இரகசிய உளவுத் தகவல்களைப் (Classified Intelligence) பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதற்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட அதிமுக்கியத் துறைகளின் உத்தியோகபூர்வ இரகசிய உளவுத் தகவல்களை, கனடாவும் பிரான்சும் பகிர்ந்து கொள்ளவுள்ளன.
பிரான்சில் நடைபெறவுள்ள ஜி7 (G7) தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஐரோப்பாவிற்கு 9 ஆவது உத்தியோகபூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ள கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Prime Minister Mark Carney), இன்று பாரிஸில் உள்ள எலிசி அரண்மனையில் (Palais de lÉlysée) பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானைச் சந்தித்துப் பேசினார்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் தொழில்சார் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் நோக்கில் ‘தகவல் பொதுப் பாதுகாப்பு ஒப்பந்தம்’ எட்டப்பட்டுள்ளதாகப் பிரதமர் கார்னி
அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
புதிதாக ஏற்பட்டுள்ள இந்த உளவுத் தகவல் பகிர்வு ஒப்பந்தம், கனடா மற்றும் பிரான்ஸ் முதலான நாடுகளின் இராணுவப் பாதுகாப்பையும் தாண்டி அதிநவீன தொழில்நுட்பத் துறைகளையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளையும் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள் பாதுகாப்பு (Defence), விண்வெளித் தொழில்நுட்பம் (Space), விண்வெளிப் பொறியியல் (Aerospace) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் மிக இரகசியமான உத்தியோகபூர்வத் தரவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கு, இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


