கியூபெக் மாகாணத்தில் வரும் ஒக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் அரசியல் பரபரப்பான சூழலில், மாகாண அரசின் 2025-26 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை (Budget deficit) ஆரம்பத்தில் கணிக்கப்பட்டதை விடப் பாதியாக, அதாவது $7.2 பில்லியனாகக் குறைந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
கியூபெக் நிதி அமைச்சகம் அதன் பூர்வாங்க நிதி அறிக்கையில் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கியூபெக் மாகாணத்தின் பொருளாதாரம் வலுவான மீட்சியைச் சந்தித்து வருவதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கியூபெக் மாகாண நிதி அமைச்சர் எரிக் ஜிரார்ட் (Eric Girard) தேசிய சட்டமன்றத்தில் (National Assembly) மாகாணத்தின் மேம்படுத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்.
கடந்த 2025 ஆண்டு மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, 2025-26 நிதியாண்டின் ஒட்டுமொத்தப் பற்றாக்குறை 13.6 பில்லியன் டொலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு, பின்னர் அது நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் 9.9 பில்லியன் டொலராக குறைத்து மதிப்பிடப்பட்டது.
ஆனால், நிறைவடைந்த நிதியாண்டின் இறுதிப் பூர்வாங்க முடிவுகளின்படி, ஒட்டுமொத்தப் பற்றாக்குறை 47 சதவீதம் குறைவடைந்து, 7.2 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. நிதி நிலவரம் முன்னேற்றமடைந்துள்ளதாக கியூபெக் அரசு கூறினாலும், எதிர்க்கட்சியான கியூபெக் லிபரல் கட்சியின் (Quebec Liberal Party) தலைவர் சார்ள்ஸ் மில்லியார்ட் (Charles Milliard) இந்த அறிக்கையை விமர்சித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

