சீக்கிய செயற்பாட்டாளரின் படுகொலையில் இந்திய முகவர்களின் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் உறவில் ஏற்பட்ட முடக்கத்திற்குப் பிறகு, கனடா தற்போது இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இருப்பினும், இந்த வர்த்தக நடவடிக்கையைத் தொடரும் அதே வேளையில், பொதுப் பாதுகாப்பு, தேசிய எல்லை கடந்த அடக்குமுறை (Transnational Repression), மற்றும் வெளிநாட்டுத் தலையீடு ஆகிய விடயங்களில் கனடா உறுதியாக இருக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச வர்த்தகச் சூழல் அடிப்படையில் மாறிவிட்டது" என்றும், பொருளாதார உறவுகளைச் சீரமைக்க வேண்டியது அவசியம் என்றும் அனிதா ஆனந்த் கூறினார். பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் சந்தித்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வர்த்தக ஒப்பந்தம் கனடா-இந்திய வர்த்தகத்தை 70 பில்லியன் டொலராக இரட்டிப்பாக்கலாம் என்று பிரதமர் கார்னி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


