ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பு அமைப்பான நேட்டோ (NATO) படைகளுக்குத் தான் வழங்கி வந்த பிரதான போர் விமானங்கள் மற்றும் அதிநவீன போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை அமெரிக்கா பெருமளவில் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் இந்த அதிரடிப் பின்வாங்கல் நடவடிக்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய எட்டு தசாப்த கால அட்லாண்டிக் கடந்த பாதுகாப்பு உறவில் (Transatlantic security) பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் ரஷ்யாவின் இராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் ஒரு இக்கட்டான சூழலில், நேட்டோ படைகளுக்கான அமெரிக்காவின் பங்களிப்பைக் கணிசமாகக் குறைப்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் ஜூன் மாத தொடக்கத்தில் கூட்டணி நாடுகளுடன் பகிரப்பட்டுள்ளன.
இந்த புதிய பாதுகாப்பு உத்தியின்படி, அமெரிக்கா தனது வான்வெளி மற்றும் கடல்வழிப் படை பலத்தைக் குறைத்து, அந்தப் பாதுகாப்பு இடைவெளியை ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் தங்களின் சொந்தப் பொறுப்பில் நிரப்ப வேண்டும் என்று வாஷிங்டன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள் பல ஐரோப்பிய நட்பு நாடுகளின் பாதுகாப்புத் திட்டமிடலில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்பகமான ஆவணங்களின்படி, நேட்டோவின் அவசரக்காலப் பாதுகாப்பு மாதிரியில் (NATO Force Model) இருந்து அமெரிக்கா முக்கியப் படைப்பிரிவுகளை விலக்கிக் கொள்ளவுள்ளது.
போர் விமானங்கள், கடற்படை உளவு விமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள், வியூகம் மற்றும் கடற்படை மாற்றங்கள் முதலான அனைத்து பாதுகாப்பு சார் உதவிகளும் குறைத்துக் கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்துப் பென்டகன் (Pentagon) இன்னும் பொதுவெளியில் புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும், அமெரிக்காவின் ஐரோப்பிய கட்டளைப் பணியகத்தின் (US European Command) தளபதியும், நேட்டோவின் உயர்மட்ட இராணுவ அதிகாரியுமான ஜெனரல் அலெக்ஸஸ் க்ரின்கேவிச் (General Alexus G. Grynkewich) இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் திறன் மற்றும் ரஷ்யாவின் உட்பகுதி வரை பாயும் ‘டொமாஹாக்’ (Tomahawk) ஏவுகணைகளை ஏவும் திறன் ஆகியவற்றில் இருந்து, அமெரிக்கா விலகுவது தங்களுக்குப் பெரும் பின்னடைவு என்று ஐரோப்பிய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


