பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட வியாபார நிலையம் ஒன்றில் கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப.தினேஸினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, பாணிப்பனாட்டு மாதிரிகள் பெறப்பட்டு அதனுடைய தரம் தொடர்பாக பகுப்பாய்வு செய்வதற்கு அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட பாணிப்பனாட்டு தரமற்றது எனவும், மண் மற்றும் வெளிப்பொருட்களால் பாதிக்கப்பட்டது என்றும் மனித நுகர்விற்கு ஏற்றதல்லது என்றும் என பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதனை அடுத்து உணவுப்பொருளினை உற்பத்தி செய்த உரிமையாளருக்கும் அதனை விநியோகம் செய்த விநியோகஸ்தருக்கு எதிராகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது, இருவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, குறித்த உணவுப்பொருளினை உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் விநியோகஸ்தரிடமிருந்து 8000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது.
