மொன்றியலில் கடந்த ஜனவரி மாதம் தீப்பிடித்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக, அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.மொன்றியலின் கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வாகனக் காப்பகத்திற்குள் 23 வயதான இளம் பெண் வனேசா ப்ரைமோவின் (Vanessa Primeau) சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது. வனேசா கடந்த சில காலமாகவே கடுமையான மனநலப் பிரச்சினைகளாலும் (Mental health issues) மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினாலும் (Substance use) அவதிப்பட்டு வந்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த மரணத்தைச் சந்தேகத்திற்குரியது (Suspicious death) என்று மட்டுமே வகைப்படுத்தி, புலனாய்வு செய்து வரும் மொன்றியல் பொலிஸார், இதுவரை கொலையாளி எவரையும் அடையாளம் காணவில்லை. வனேசாவின் சகோதரர் ஜொனாதன் (Jonathan) கூறுகையில், தனது தங்கை அந்த தீயில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என்றும், யாரோ அவளைக் கொலை செய்துவிட்டு ஆதாரங்களை அழிப்பதற்காகவே வாகனக் காப்பகத்திற்குள் தீ வைத்துள்ளனர் என்று தாம் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.
இது ஒரு சாதாரண விபத்து அல்ல என்றும், திட்டமிட்ட படுகொலை (Homicide) என்ற கோணத்திலேயே பொலிஸார் விசாரணையை முடுக்கிவிட வேண்டும் என்றும், உயிரிழந்த பெண்ணின் தாய் தேரசா ப்ரைமோ (Thérèse Primeau) கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கில் மொன்றியல் பொலிஸார் (SPVM) போதிய தகவல்களைத் தங்களுக்கு வழங்காமல் மெத்தனம் காட்டுவதாகக் குற்றம் சாட்டி, சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி அஞ்சலிப் பேரணியையும் நடத்தியுள்ளனர்.
வனேசாவின் மரணத்திற்கு நீதி கோரியும், விளிம்புநிலை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் ஸ்டெல்லா(Stella) என்ற பாலியல் தொழிலாளர் ஆதரவு அமைப்பு இந்த அஞ்சலிப் பேரணியை ஒருங்கிணைத்தமை குறிப்பிடத்தக்கது.
