கனடாவின் மீது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னெடுக்கும் அச்சுறுத்தல் ராஜதந்திரம் (Strangelove Diplomacy) அமெரிக்காவிற்கே பாதகமாக முடியலாம் என, முன்னாள் கனேடிய இராஜதந்திரிகள்
எச்சரித்துள்ளனர். இந்த நடவடிக்கை, அமெரிக்கா ஒரு நம்பகமான கூட்டாளி அல்ல என்ற எண்ணத்தைக் கனேடிய மக்கள் மத்தியில் ஆழமாக விதைக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அச்சுறுத்தல் ராஜதந்திர நடவடிக்கையானது, எதிர்காலத்தில் அமெரிக்கா தனது இராணுவ உபகரணங்களை கனடாவுக்கு விற்பனை செய்வதற்கான அனுமதியை கனேடிய நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்வதை கடினமாக்கும் எனவும் முன்னாள் கனேடிய இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மையில் கனடா – அமெரிக்க நிரந்தரக் கூட்டுப் பாதுகாப்பு வாரியத்தின் (PJBD) செயல்பாடுகளில் இருந்து அமெரிக்கா திடீரென விலகியுள்ளதைச் சுட்டிக்காட்டியே, முன்னாள் கனேடிய இராஜதந்திரிகள் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
1940 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் மற்றும் கனேடியப் பிரதமர் வில்லியம் லியோன் மெக்கென்சி கிங் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த 86 ஆண்டு கால ”கூட்டுப் பாதுகாப்பு வாரியம்”, தற்போது இரு நாடுகளுக்கும் இடையே முற்றியுள்ள ராஜதந்திரக் கசப்புணர்வால் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
