கியூபெக் மாகாணத்தின் புதிய பொதுப் பிரார்த்தனை தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி, உள்ளூர் நகரசபை நிர்வாகம் அனுமதி மறுத்திருந்த போதிலும், மொன்றியலின் பாரம்பரியமிக்க போர்த்துக்கேய மதப் பேரணி எவ்வித தடங்கலுமின்றி திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
மொன்றியலின் ‘பிளாட்டோ-மொன்ட்-ரோயல்’ (Plateau-Mont-Royal) பிராந்திய நிர்வாகம் இந்தப் பேரணிக்கான அனுமதியை இறுதி நேரத்தில் ரத்து செய்திருந்தது.
எனினும், மொன்றியல் காவல்துறையினர் (SPVM) இந்த விவகாரத்தில் தலையிட்டு, பேரணிக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கி அதனை நடத்த அனுமதித்ததால் பெரும் சர்ச்சை தற்காலிகமாகத் தணிந்தது.
‘சென்ஹோர் சாண்டோ கிறிஸ்டோ’ (Senhor Santo Cristo) என்று அழைக்கப்படும் இந்த ஆன்மீக மற்றும் கலாசார வீதி உலா, மொன்றியலில் வாழும் போர்த்துக்கேய வம்சாவளி மக்களால் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மிக விமர்சையாக நடத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
‘மிஷன் சாண்டா குரூஸ்’ கத்தோலிக்க தேவாலயத்துடன் இணைந்து இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த இமானுவேல் லின்ஹாரெஸ் (Emanuel Linhares) கருத்துத் தெரிவிக்கையில், கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதியே தாங்கள் அனுமதிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் நிகழ்வு நடப்பதற்கு வெறும் 10 நாட்களுக்கு முன்னரே நகரசபை நிர்வாகம் அனுமதியை மறுத்து அதிர்ச்சியளித்ததாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் கியூபெக் மாகாண அரசால் பொது இடங்களில் திட்டமிட்ட மத வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளைத் தடை செய்யும் புதிய மதச்சார்பின்மை விதிமுறைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன.
இதனை அடிப்படையாகக் கொண்டே பிராந்திய நகரசபை இந்த அனுமதியை மறுத்திருந்தது.
எனினும், மொன்றியல் காவல்துறையினர், நகரசபையின் தடையை மீறி பேரணியை அமைதியான முறையில் நடத்துவதற்கும், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை ஒழுங்குபடுத்துவதற்கும் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
