கியூபெக் மாகாணத்தில் குடும்ப மருத்துவப் படிப்புக்கான (Family Medicine Residency) இடங்களை நிரப்புவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கனேடிய மருத்துவ மாணவர் சேர்க்கை அமைப்பு (CaRMS) தெரிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேல்படிப்பு இடஒதுக்கீட்டு முடிவுகளின்படி, கியூபெக்கில் மட்டும் 151 குடும்ப மருத்துவக்கற்கை இடங்கள் விண்ணப்பங்கள் இன்றி வெறுமையாக உள்ளன.
இது, நாடு முழுவதும் வெறுமையாக உள்ள மொத்த குடும்ப மருத்துவக்கற்கை இடங்களில் சுமார் 60 சதவீதமாகும். அரசாங்கம் இடங்களின் எண்ணிக்கையை 1,008 ஆக உயர்த்திய போதிலும், புதிய மருத்துவ பட்டதாரிகள் இத்துறையைத் தேர்வு செய்ய முன்வராதமை, கியூபெக்கின் சுகாதாரக் கட்டமைப்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
கியூபெக் மாகாண அரசாங்கத்தின் சில கடுமையான சட்டங்களே இதற்குக் காரணமாகின்றன என மருத்துவ மாணவர்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, புதிய மருத்துவர்களை மாகாணத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்று பணியாற்றக் கட்டாயப்படுத்தும் கியூபெக் அரசின் போக்கு, மாணவர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், கியூபெக்கைச் சேர்ந்த பல மாணவர்கள் மற்ற மாகாணங்களுக்குச் சென்று பணிபுரிதலிலும் வேறு சிறப்பு மருத்துவப் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது கியூபெக்கில் பணியாற்றும் குடும்ப மருத்துவர்களில் 22 சதவீதத்தினர் 60 வயதைக் கடந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய மருத்துவர்கள் இத்துறையில் இணையாதது கவலைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் குடும்ப மருத்துவர்களைச் சந்திப்பது கியூபெக் மக்களுக்குப் பெரும் போராட்டமாக இருக்கும் என மருத்துவ சங்கங்கள் எச்சரித்துள்ளன.
