ஒண்டாரியோ மாகாண அரசு வாங்கிய 28.9 மில்லியன் டொலர் பெறுமதியான புதிய சொகுசு விமானம், அதே மாகாணத்திலுள்ள 90 சதவீத விமான நிலையங்களில் தரையிறங்க முடியாத ஒன்று என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வடக்கு ஒண்டாரியோ மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு விரைவாகச்
செல்வதற்காக இந்த விமானம் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தொழில்நுட்ப ரீதியாக இது அந்தப் பகுதிகளுக்குப் பயன்படாது எனத் தெரியவந்துள்ளது.
ஊடக நிறுவனமொன்று நடத்திய ஆய்வில், இந்த பம்பார்டியர் சேலஞ்சர் 650 (Bombardier Challenger 650) ரக விமானம் குறித்த உண்மைகள் தெரியவந்துள்ளன.
வடக்கு ஒண்டாரியோவில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்கள் சிறியவை மற்றும் மண்தரையான (Gravel) ஓடுதளங்களைக் கொண்டவை. ஆனால், இந்த பாரிய சொகுசு விமானம் தரையிறங்குவதற்கு மிக நீண்ட மற்றும் கொங்கிரீட் இடப்பட்ட ஓடுதளங்கள் அவசியமாகும்.
ஒண்டாரியோவில் உள்ள மொத்த விமான நிலையங்களில் வெறும் 10 சதவீத இடங்களுக்கு மட்டுமே இந்த விமானம் செல்ல முடியும் என்ற நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ரொறன்ரோ, ஒட்டாவா போன்ற பெரிய நகரங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு இது செல்ல முடியாது என, அந்த ஊடக நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒண்டாரியோ மாகாணத்தின் பின்தங்கிய பகுதி மக்களையும் பழங்குடியின மக்களையும் சந்திப்பதற்காகவே இந்த விமானம் வாங்கப்பட்டது என்ற, அந்த மாகாண அரசின் வாதம் தற்போது பொய்யாகியுள்ளது.
முதலமைச்சர் வடக்கு ஒண்டாரியோவிற்குச் செல்ல விரும்பினால், அவர் சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் இந்தச் சொகுசு விமானம் அவருக்கு ஒரு ஆடம்பரப் பொம்மைமட்டுமே எனவும், ஒண்டாரியோவின் எதிர்க்கட்சித் தலைவர் மாரித் ஸ்டைல்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தத் தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, விமானத்தை விற்கும் முடிவில் மாற்றம் இல்லை என முதலமைச்சர் டக் ஃபோர்ட் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
