கனடாவின் கியூபெக் மாகாணத்தில் போத்தல் மற்றும் டின் திருப்பிச் செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது. பல ஆண்டுகளாக, மக்கள் கடைகளில் உள்ள இயந்திரங்களில் பானக் குடுவைகளை திருப்பி கொடுத்து பணத்தை பெற்றுக்கொண்டனர். ஆனால் தற்போது, அந்த முறை படிப்படியாக நீக்கப்பட்டு, புதிய நவீன முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
Consignaction நிறுவனத்தின் திட்டத்தின் கீழ், பழைய கடை இயந்திரங்களுக்கு பதிலாக, தனிப்பட்ட “return centres” மற்றும் “sorting centres” உருவாக்கப்படுகின்றன. இந்த புதிய மையங்கள் அதிக அளவில் குடுவைகளை விரைவாக செயல்படுத்த உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாற்றம் 2024 முதல் தொடங்கிய டெபாசிட் – ரீபண்ட் (deposit – refund) முறை நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாகும். புதிய முறை மூலம் ஏற்கனவே கோடிக்கணக்கான பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் 2032 ஆம் ஆண்டுக்குள் 90% மீள்சுழற்சி இலக்கை அடைவது நோக்கமாக உள்ளது. ஆனால், இந்த மாற்றத்திற்கு மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடைகளில் இருந்த எளிய முறையை மாற்றி, தனியாக வேறு இடங்களுக்கு சென்று பாட்டில்களை ஒப்படைக்க வேண்டிய நிலை சிரமத்தை ஏற்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர்.
இதனால், சுற்றுச்சூழலுக்கும், மக்களின் வசதிக்கும் இடையிலான சமநிலை குறித்து விவாதம் எழுந்துள்ளது.
இந்த புதிய முறை நடைமுறையில் எப்படி செயல்படும்? மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா? என்பதே அடுத்த கட்டத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய கேள்வியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
