மொன்றியலில் 15 வயது சிறுமி மீரியம் பௌண்டாவ் (Meriem Boundaoui) சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளியான சலீம் துவைபிக்கு (Salim Touaibi) மேலும் நான்கு ஆயுள் தண்டனைகளை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.
இந்தத் தண்டனை விசாரணை இன்று மொன்றியல் நீதிமன்றத்தில் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மொன்றியலின் செயின்ட் லியோனார்ட் பகுதியில் வாகனத்தில் அமர்ந்திருந்த மீரியம், அவ்வழியே வந்த காரிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
கடந்த வாரம் நடைபெற்ற இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையில், சலீம் துவைபி முதல்நிலை கொலைக் குற்றவாளி (First-degree murder) என அறிவிக்கப்பட்டார். இதற்காக அவருக்கு ஏற்கனவே 25 ஆண்டுகள் பிணையில் வர முடியாத ஆயுள் தண்டனை உறுதியாகியுள்ளது.
கொலைக் குற்றத்தைத் தவிர, அங்கிருந்த மற்ற நால்வரை நோக்கிச் சுட்டதற்காக கொலை முயற்சி (Attempted murder) குற்றச்சாட்டுகளும் அவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. இதற்காகவே தற்போது அரசுத் தரப்பு சலீம் துவைபிக்கு மேலதிக ஆயுள் தண்டனைகளை அளிக்க வேண்டுமெனக் கோரி வருகிறது.
மொன்றியல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இன்றைய விசாரணையில் மீரியத்தின் பெற்றோர் மற்றும் சகோதரிகள் சாட்சியமளித்தமை குறிப்பிடத்தக்கது.
