மொன்றியல் மாநகரசபையின் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட கடைநிலை ஊழியர்கள் (Blue-collar workers), ஊதிய உயர்வு கோரி வரும் ஏப்ரல் மாதம் மூன்று நாட்களுக்குத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை CUPE Local தொழிற்சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி, புதன்கிழமை காலை 6:00 மணிக்குத் தொடங்கி, 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6:00 மணி வரை நடைபெறும். மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் தற்காலிகப் பணிப் பகிஷ்கரிப்பால் மொன்றியல் பொதுமக்கள் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், மீள்சுழற்சிப்பொருட்கள் மற்றும் உரம் சேகரிப்புப் பணிகள் முற்றாக நிறுத்தப்படவுள்ளது. மாநகரசபைக்குச் சொந்தமான விளையாட்டு அரங்குகள் (Arenas) மற்றும் சில பூங்காக்கள் மூடப்பட வாய்ப்புள்ளது.
அவசரமற்ற வீதித் திருத்தப் பணிகள் மற்றும் நீர் விநியோகப் பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. மொன்றியல் மாநகரசபை நிர்வாகம் வழங்கும் 11 சதவீத ஊதிய உயர்வு தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஈடுகொடுக்கப் போதுமானதல்ல என்று ஊழியர்கள் தரப்பு வாதிடுகிறது.
போராட்டம் நடைபெற்றாலும், மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவசர கால நீர் விநியோகத் திருத்தங்கள் மற்றும் மிக முக்கியமான வீதிப் பழுதுபார்ப்புகள் மட்டும் தொடர்ந்து நடைபெறும் என ஊழியர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
