கடந்த 2023-ஆம் ஆண்டு பழைய மொன்றியல் பகுதியில் (Old Montreal) இடம்பெற்ற பாரிய தீ விபத்து தொடர்பாக, அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரான எமிலி பெனமோர் (Emile Benamor) இன்று மொன்றியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஏழு பேரின் மரணத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்கத் தவறியமை மற்றும் குற்றவியல் அலட்சியம் உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி அன்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்த விபத்தில் 18 வயது இளைஞர்கள் முதல் 76 வயது முதியவர் வரை மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருந்த நிலையில், இந்தத் திடீர் கைது நடவடிக்கை அவர்களுக்கு ஒரு சிறிய ஆறுதலை அளித்துள்ளது.
இந்தத் தீ விபத்து தற்செயலாக நடந்தது அல்ல என்பதும் திட்டமிட்டு வைக்கப்பட்ட தீ (Arson) என்பதும் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது. எனினும், கட்டிட உரிமையாளர் பெனமோர் மீது தீ வைத்ததாகக் குற்றம் சுமத்தப்படவில்லை.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் முறையான அவசர கால வெளியேறல் வழிகள் இல்லை என்றும், பல அறைகளில் ஜன்னல்களே இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்தவர்களில் ஆறு பேர் சட்டவிரோதமாக இயக்கப்பட்ட தங்குமிடங்களில் தங்கியிருந்தனர்.
கட்டிடத்தின் பாதுகாப்பு ஓட்டைகளைச் சரிசெய்யாமல் லாபத்திற்காக அதனை வாடகைக்கு விட்டதே பெனமோர் மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டாகும். இந்த வழக்கில் இரண்டு வெவ்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
