கடும் பனிமழையால் நிலைகுலைந்துள்ள மொன்றியல் நகர மக்களுக்கு உதவும் வகையில், வாகனங்களை நிறுத்துவதற்கான (Parking Rules) விதிகளில் தற்காலிக தளர்வுகளை மொன்றியல் மாநகராட்சி அறிவித்துள்ளது.
மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் பனிக்கட்டிகளால் வீதிகள் மூடப்பட்டுள்ள இக்கட்டான சூழலில், மக்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு, இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மொன்றியல் நகரத்தின் வாகன நிறுத்தல் முகாமைத்துவ முகவரகம் (Agence de mobilité durable) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சில விதிகளில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
பொதுவாக குடியிருப்பாளர்களுக்கான பிரத்யேக ஸ்டிக்கர் (Sticker) ஒட்டிய வாகனங்கள் மட்டுமே நிறுத்தக்கூடிய பகுதிகளில், இப்போது ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களையும் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் நகரத்தின் வீதியோரங்களில் பணம் செலுத்தி வாகனங்களை நிறுத்தும் இடங்களில், கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும் இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பொதுப் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மொன்றியல் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
