கனடாவின் மிகவும் தேடப்பட்டு வந்த குற்றவாளியும், ‘பிளட் பேமிலி மாஃபியா’ (Blood Family Mafia – BFM) என்ற பயங்கரவாதக் கும்பலின் தலைவனுமான டேவ் ‘பிக்’ டர்மலை (Dave “Pik” Turmel) கனடாவிடம் ஒப்படைக்க இத்தாலிய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த அதிரடி உத்தரவு கடந்த திங்கட்கிழமை பிறப்பிக்கப்பட்டது.
29 வயதான டேவ் டர்மல், கியூபெக் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிழல் உலகக் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஒரு முக்கிய நபர் ஆவார்.
இவரது கும்பலுக்கும், ‘ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ்’ (Hells Angels) எனும் மற்றொரு சமூகவிரோதக் கும்பலுக்கும் இடையே கியூபெக் நகரில் நீண்டகாலமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன.
2023-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த இவரைப் பிடிக்க 2,50,000 டொலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் இத்தாலியின் ரோம் நகரில் ஒரு விடுமுறை இல்லத்தில் தங்கியிருந்தபோது, சர்வதேசக் காவல்துறையினரால் (Interpol) இவர் சுற்றி வளைக்கப்பட்டார்.
தற்பொழுது, இத்தாலிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய டர்மலுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேன்முறையீடு செய்யாவிட்டால் அல்லது மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டால், கியூபெக் காவல்துறையினர் ரோம் நகருக்குச் சென்று இவரைப் பாதுகாப்பாகக் கனடாவிற்கு அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
