மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாரியை கைது செய்ய முற்பட்ட பொலிசாரை தாக்கி கசிப்பு வியாபாரியை கைது செய்ய விடாது தடுத்து கைகலப்பில் ஈடுபட்டு வியாபாரியை தப்பி ஓட வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 6 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நரிப்புதோட்டம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வீடு ஒன்றை சம்பவ தினமான நேற்று சனிக்கிழமை (17) மாலை 4.30 மணியளவில் பொலிசார் முற்றுகையிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த 62 வயதுடையவரை 180 மில்லி கிராம் கசிப்புடன் கைது செய்து கொண்டு செல்வதற்கு முயற்சித்த போது அவரின் உறவினர்களான பெண்கள் உட்பட்ட குழுவினர் பொலிசாரை தள்ளி வீழ்த்தி தடுத்து கைகலப்பில் ஈடுபட்டதையடுத்து வியாபாரி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலையில் பொலிசாருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 15 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டதை அடுத்து பொலிசார் அவர்களை வீடியோ படம் எடுத்துவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றனர்.
இந்த நிலையில் பொலிசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒருவர் அங்கிருந்து கரடியனாறு பகுதிக்குள் தப்பி ஓடிய நிலையில் அவரை கரடியனாறு பொலிசார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து பொலிசாருடன் கைகலப்பில் ஈடுபட்டு கடமையை செய்ய விடாது தடுத்த மற்றும் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பெண்கள் உட்பட 5 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
