பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கம், அல்பர்ட்டா மாகாணத்துடன் கையெழுத்திட்ட புதிய எரிசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சரான ஸ்டீவன் குயில்போட் (Steven Guilbeault) தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த தனது நீண்டகால நிலைப்பாட்டை காப்பாற்றுவதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் அறிவித்துள்ளார்.
குயில்போட் (Guilbeault) பதவி விலகினாலும், அவர் தாராளவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து நீடிப்பார்.
பிரதமர் மார்க் கார்னி மற்றும் அல்பர்ட்டா மாகாண முதலமைச்சர் டேனியல் ஸ்மித் ஆகியோர் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தம், பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரைக்கு ஒரு புதிய பிட்டூமன் குழாய் பாதை (bitumen pipeline) அமைப்பதற்கு வழிவகுக்கிறது.
இந்தக் குழாய் மூலம் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பேரல் எண்ணெய் ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
குயில்போட் (Guilbeault) அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட முக்கியமான காலநிலை நடவடிக்கைகளை இந்த ஒப்பந்தம் நீக்குகிறது.
காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் முன்னணியில் நிற்பதற்காகவே தாம் அரசியலுக்கு வந்ததாகவும் அல்பர்ட்டா மாகாண அரசாங்கத்துடனான இந்த ஒப்பந்தத்தை தாம் தீவிரமாக எதிர்ப்பதாகவும் குயில்போட் (Guilbeault) தெரிவித்துள்ளார்.
