வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் மேலும் ஒரு சந்தேகநபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் காலியில் வெலிகம பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நான்கு சந்தேகேநபர்களை கைது செய்துள்ளதுடன், அவர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் இருந்த மேலும் சில நபர்கள் பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில் அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக எனும் சந்தேகநபர் ஒருவர் தப்பி சென்றுள்ளார்.
குறித்த சந்தேகநபரை கைது செய்யவே பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த சந்தேகநபர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் “ANURADA” என்றும், இடது கையில் “හිතුමතේ ජීවිතේ” (சுயாதீன வாழ்க்கை) என்றும் பச்சை குத்தியுள்ளார்.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க (WhatsApp) – 071 859 8888 நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு – 011 233 7162 / 071 859 2087
இதேவேளை, குறித்த வீட்டில் சந்தேகநபர்கள் குற்றத்திற்குப் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள்,12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் திணைக்களம், தென் மாகாணப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், மாத்தறை மற்றும் அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
