கனடா கூட்டமைப்பிற்குள் கியூபெக்கின் தனித்துவமான தேசிய அடையாளத்தை உறுதியாக நிலைநாட்டும் நோக்கில், கியூபெக் மாகாண அரசாங்கம் ஒரு வரைவுநிலை அரசியலமைப்பை வெளியிட்டுள்ளது.
இது, கியூபெக் மாகாணத்தின் முக்கிய கொள்கைகளை உறுதிப்படுத்தவும், தன்னாட்சியை (autonomy) அதிகரிக்கவும், பல்வேறு சட்டங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரவும் முயல்கிறது.
இதனை கியூபெக் மாகாணத்தின் “அனைத்துச் சட்டங்களுக்குமான சட்டம்” (law of all the laws) என்று முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகோ (François Legault) குறிப்பிட்டுள்ளார்.
கியூபெக் தேசிய சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ‘கியூபெக் அரசியலமைப்புச் சட்டம்,2025’ மொத்தமாக 51 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இது மாகாணத்தின் ஆட்சிமுறையிலும் சட்டக் கட்டமைப்பிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது.
இச்சட்டம் பிரெஞ்சு மொழியை கியூபெக் தேசத்தின் ஒரே உத்தியோகபூர்வ மற்றும் பொது மொழியாக ஆழமாக நிலைநாட்டுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும், இது “கனடாவின் பல்லினக் கலாச்சாரத்தை” (Canadian multiculturalism) நிராகரித்து, “தேசிய ஒருமைப்பாட்டுக் கொள்கையை” ஆதரிப்பதுடன், கருக்கலைப்பு (abortion) மற்றும் மருத்துவ உதவியுடன் இறக்கும் உரிமை (medical assistance in dying) முதலான உரிமைகளை கியூபெக்கின் மனித உரிமைகள் மற்றும் சுதந்திர சாசனத்தில் உள்ளடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
