தண்டனைச் சட்டக்கோவை திருத்தம் சட்டமூலம் மாணவர்களின் ஒழுக்கத்தை சீர்குலைத்து தன்பாலின கலாசாரத்தை ஊக்குவிக்கும் சூழலை ஏற்படுத்தும். இந்த சட்டமூலத்தை அரசாங்கம் உடன் மீளப்பெற வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தண்டனைச் சட்டக்கோவை திருத்தம் சட்டமூலத்தை அரசாங்கம் அவசரமாக பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டமூலம் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
கல்வி அமைச்சராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்த சட்டமூலம் பற்றி குறிப்பிடுகையில், பாடசாலை மாணவர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டுவரப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தில் அவமானப்படுத்தல் என்பதற்கு முறையான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை.
இந்த சட்டமூலத்தின் ஊடாக புதிய லிபரல்வாத கொள்கை மற்றும் தன்பாலின கலாசாரம் ஆகியவற்றை செயற்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது.
இலங்கையின் பாரம்பரியமான குடும்ப முறைமையை இல்லாதொழிக்கவே அரசாங்கம் இவ்வாறான சட்டமூலங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் மாணவர்கள் பாடசாலைக்கு பொருத்தமற்ற ஆடையிலோ அல்லது உடலில் பச்சை குத்திக் கொண்டு வந்தாலோ ஆசிரியர்களால் அவர்களை தண்டிக்க முடியாத நிலை ஏற்படலாம்.
அவ்வாறு தண்டித்தால் மாணவர்கள் அதனை அவமானப்படுத்தலாக கருதி ஆசிரியர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம். இந்த சட்டமூலம் சமூக கட்டமைப்பில் குறிப்பாக பாடசாலை கல்வி கட்டமைப்பில் வீண் முரண்பாடுகளை ஏற்படுத்தும்.
ஆகவே இந்த சட்டமூலத்தை அரசாங்கம் உடன் வாபஸ் பெற வேண்டும்.மகாநாயக்க தேரர்கள் இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்துவோம் என்றார்.
