சென்னையில் உள்ள அமெரிக்க மற்றும் பெங்களூருவில் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையில் பணியில் இருந்த பாகிஸ்தான் அதிகாரிக்கு, என்ஐஏ என்ற இந்திய தேசிய புலனாய்வு முகவரத்தின் விசேட நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
அதன்படி, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் அதிகாரி ஒருவருக்கே, எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதியன்று நேரில் முன்னிலையாக வேண்டும் என்று பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகவரகத்தின் விசேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் கராச்சியில் நிரந்தர முகவரியைக் கொண்ட அமீர் ஸுபைர் சித்திக் என்ற அதிகாரிக்கே இந்த அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
அவர் 2009 மற்றும் 2016 க்கு இடையில் கொழும்பில், பாகிஸ்தானுக்கான விசா ஆலோசகராக பணியாற்றினார் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அறிக்கையின்படி, குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல் மற்றும் போலி நாணயங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.
இந்தநிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் சென்னை, கியூ பிரிவால் பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஹைதராபாத் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபரான அமீர் ஸுபைர் சித்திக்கின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் நாசவேலை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா வந்ததாக கூறப்படும் இலங்கையரான சாகிர் ஹுசைன் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதல் சந்தேகநபரான பெயரிடப்பட்டிருந்த சாகிர் ஹுசைன் முன்னதாக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் 2018 ஆம் ஆண்டில், அமீர் ஸுபைர் சித்திக்குக்கு எதிராக தேசிய புலனாய்வு முகவரகம் மேலதிக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த நபர் தொடர்பில் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் எந்தவித உத்தியோகபூர்வ தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.
