முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாத நிலை ஏற்படலாம் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது.
அவரது உடலில் உள்ள குருதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
அத்துடன் ஏனைய பிற அறிகுறிகளும் தென்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் பல மணி நேரம் காத்திருந்தபோது மின்சாரம் தடைப்பட்டதாலும், நீண்ட நேரம் நீர் அருந்தாமையினாலும் இந்த நீர்ச்சத்து குறைபாடு இவருக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
இதன் காரணமாக, அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தீவிர வைத்திய மேற்பார்வையின் கீழ் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்தவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
எனவே, அவரை மூன்று நாட்கள் கட்டாய ஓய்வில் வைத்து, நீர்ச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் தெரிவித்தார்.
ஒருவேளை, அவ்வாறு சிகிச்சை அளிக்காவிட்டால், இதயப் பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்பட ஆபத்துக்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
