வடக்கு கிழக்கின் தமிழர் தாயக பிரதேசங்களில் செறிவான இராணுவ பிரசன்னம் அகற்றப்பட்டு எமது மக்களின் பாரம்பரிய வரலாற்று நிலங்கள் எமது மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும் என 18.08.2025 ஏற்பாடாகி உள்ள முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவினை நாம் வழங்குகின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக் கட்சியின் செயலாளர் க. துளசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வேண்டுமெ ன்றே சில தரப்புகள் போராட்டங்களை குழப்பியடித்து இனத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
அன்பான எமது உறவுகளே அதீத இராணுவ பிரசன்னம் இன்றுவரை எமது தாயக நிலங்களில் ஏற்படுத்தி வருகின்ற இடர்பாடுகளை சந்தித்து அவற்றின் இழப்பினை உணர்ந்துகொண்டவர்கள் நாங்கள். நல்லூர் திருவிழா நாட்களிலோ மடுத்திருவிழா நாட்கள் என்பதனாலோ சிங்கள இராணுவம் எம்மீது செல்தாக்குதலை நிறுத்துவதில்லை என்கின்ற வராலாற்று வலியை உங்களுக்கு நியாபகம் ஊட்ட விரும்புகிறேன். போராட்டம் வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து போராடும் மனவலிமையை தந்தவன் வழியில் போராடியவர்கள் நாங்கள்.
எமது மக்களின் எதிர்கால நலன்கள்கருதி தாயகத்தின் செறிவான இராணுவ பிரசன்னம் அகற்றபட வேண்டி யார் அழைப்பினும் நாம் எமது ஜனநாக ஆதரவினை தொடர்ந்து வழங்குவோம்.
