கியூபெக் மாகாணம் பிரிந்து தனிநாடாவதற்கான மூன்றாவது பொதுவாக்கெடுப்பை (Referendum) நடத்துவற்கு குறைந்தபட்சம் 130 மில்லியன் கனடிய டொலர்கள் செலவாகும் என பார்ட்டி கியூபெக்குவா (Parti Québécois – PQ) கட்சி தெரிவித்துள்ளது.
பார்ட்டி கியூபெக்குவா (Parti Québécois – PQ) கட்சியின் தலைவர் போல் செயிண்ட் – பியர் பிளாமண்டன் (Paul St-Pierre Plamondon) இந்த தகவலை அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5-ஆம் திகதி நடைபெறவுள்ள கியூபெக் மாகாணத் தேர்தலை முன்னிட்டு, தமது கட்சி ஆட்சியமைத்தால் முன்னெடுக்கப்படவுள்ள நிதிச் சட்டகத்தை (Financial framework) விளக்கி, உள்நாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
தமது கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் 2029 அல்லது 2030-ஆம் ஆண்டில் இந்தச் சுதந்திர பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதியளித்துள்ள பிளாமண்டன், அதற்கான செலவினங்களை இரு பிரதான பிரிவுகளாகப் பிரித்துக் காட்டியுள்ளார்.
தமது கட்சி ஆட்சியமைத்த முதல் சில ஆண்டுகளில், கியூபெக்கிற்கான புதிய இடைக்கால அரசியலமைப்பை (provisional constitution) உருவாக்குவதற்காக 2027-ஆம் ஆண்டு முதல் இயங்கும் உலாவும் ஆணைக்குழு (roving commission) உள்ளிட்ட ஆய்வுகள் மற்றும் பொதுமக்கள் கலந்தாய்வுகளுக்காக 20 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2029 ஆம் ஆண்டு அல்லது 2030- ஆம் ஆண்டில் நேரடியாகப் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்காக 110 மில்லியன் டொலர்கள் செலவிடப்படும் எனவும் பார்ட்டி கியூபெக்குவா (Parti Québécois – PQ) கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமண்டன் கூறியுள்ளார்.
எதிர்பாராத செலவினங்கள் ஏற்படும் பட்சத்தில் இத்தொகை சற்றே அதிகரிக்கக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட அவர், ஜனநாயக வழியில் மக்களின் தீர்ப்பைப் பெறுவதற்காக இந்தத் தொகையைச் செலவிடுவதில் தவறில்லை என்று நியாயப்படுத்தினார்.
தேர்தல் பிரசாரம் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகள் பொதுவாக்கெடுப்பின் செலவு குறித்துத் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்த நிலையிலேயே, பிளாமண்டன் இந்தத் தகவல்களை
பகிரங்கப்படுத்தியுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானால், கனேடிய விவகாரங்களுக்கான அமைச்சருக்குப் பதிலாக, சுதந்திரச் செயல்பாடுகளுக்கான பொறுப்பு அமைச்சரை (Minister responsible for the independence process) தனியாக நியமிக்கவுள்ளதாகவும் பிளாமண்டன் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பதவிக் காலத்தை நிறைவுசெய்த பின்னரே இந்தப் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், தமது கட்சி பெரும்பான்மை அல்லது சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தாலும் பொதுவாக்கெடுப்பு நடத்துவது உறுதி என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1980 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் கியூபெக்கில் தனிநாடு கோரி இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுவாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே, கியூபெக்கைத் தனிநாடு ஆக்கும் கோரிக்கை தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

