இராணுவம் மற்றும் கடற்படை ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்கக் கோரி எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை நகரசபையால் நடாத்தப்படவுள்ள கவனயீர்ப்புப் பேரணிக்கு நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி ஆதரவு தெரிவித்து இன்றையதினம் தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தியுள்ளார்.
அவர் அதில் குறிப்பிட்டதாவது,
பருத்தித்துறை நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான தபால் திணைக்களம், நீதிமன்றம், நகர சபை ஆகியவற்றிற்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரையும், சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான கடற்படை வெளிச்ச வீடு கடற்படை முகாமிலிருந்ததும் உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தி கண்டனப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி, எதிர்வரும் 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து ஆரம்பமாகி, பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடையும்.
அங்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு வழங்குவதற்காகப் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.
இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பருத்தித்துறை நகர சபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் npp தவிர்ந்த அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
எனவே, எமது நகரின் பூர்வீக நிலங்களை மீட்டெடுக்கும் இந்த பேரணியில் பருத்தித்துறை மக்கள் அனைவரும் பெருந்திரளாக அணிதிரண்டு தங்களுடைய முழுமையான ஆதரவை வழங்குமாறு பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகோபி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

