நேபாளத்தில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடுமையான அழிவை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயுள்ள இந்த துயரத்திற்கு இடையே, இருவர் அற்புதமாக உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
நுவாகோட் மாவட்டம் பிதுர் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்த நான்கு மாடி வீட்டின் இடிபாடுகளுக்குள் 60 வயதான சந்திகா ஸ்ரேஷ்டா என்ற மூதாட்டி மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.
ஆயுதமேந்திய காவல் படையைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட மீட்புக்குழுவினர், களிமண் மற்றும் சேற்றைத் தோண்டி மூதாட்டியை மேல்தள ஜன்னல் வழியாகப் பத்திரமாக வெளியே எடுத்தனர்.
அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் காத்மண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதேபோல் மேல் திரிசூலி-1 நீர்மின் திட்டப் பகுதியில் அமைந்திருந்த இருண்ட சுரங்கப்பாதையில் உணவு மற்றும் வெளித்தொடர்பு ஏதுமின்றித் தவித்துக் கொண்டிருந்த சீன ஊழியர் லுஹைடாவ் என்பவரையும் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இந்த இரண்டு அதிசய மீட்புச் சம்பவங்களும் மக்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளன.



