தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், குறித்த மரங்களையும், பலகைகளையும் அரச மரக்கூட்டுத்தாபனத்திடம் கையளிக்குமாறு பிரதேச செயலர் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மூன்று தேக்கு மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி வெட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த காணியானது பொதுமக்களின் வழிபாட்டுக்காகவும், சமூக பணிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், குறித்த காணி எல் ஆர் சி காணியாகவே காணப்படுவதாக பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது.
அக்காணியில் அரசின் அனுமதியின்றியும், உரிய அனுமதிகள் பெறப்படாமலும் சட்ட விரோதமாக மூன்று தேக்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்ட அரச செயலகங்கள், கிராம சேவையாளர் ஊடாக அறிக்கையை பெற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது, அரச காணியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட தேக்கு மரங்கள் மற்றும், பலகைகளை அரச மரக்கூட்டுத்தாபனத்திடம் கையளிக்குமாறும், வெட்டப்பட்ட மரங்களிற்கு பதிலாக மரங்களை நாட்டி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
மேற்படி மரங்கள் விற்பனை நோக்கங்களிற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளது. வெட்டப்பட்ட காலப்பகுதியில் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் செயலாளர் சதீஸ் டானியல், சொத்து அலுவலர் உள்ளிட்டோர் வெட்டப்பட்ட மரங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்ததாகவும் கூறப்படுகின்றது.
குறித்த சட்ட விரோத செயற்பாட்டுக்கு தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன நிர்வாகிகள் ஈடுபடவில்லை என கூறப்படுகின்ற போதிலும், மேற்குறித்த இருவரும் 17.07.2026 அன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டமைக்கான ஆதாரங்கள் கெிடைத்துள்ளது.
குறித்த தினத்தன்று மேற்குறித்தவர்கள் அப்பகுதிக்கு சென்று மதிப்பீடு செய்த பின்னர் உணவருந்தியமைக்கான பற்றுச்சீட்டை திருச்சபை நிர்வாகிகளிடம் வழங்கியமை வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் 200 வருடம் பழமைவாய்ந்த வேம்பு இதேபோன்று சட்ட விரோதமாக வெட்டப்பட்டு மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், வெட்டப்பட்ட மரங்கள் விற்பனைக்காக தயாராக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் திருச்சபை மக்கள் மத்தியில் அதிர்ப்தி நிலை காணப்படுவதுடன், இயற்கையை நேசிப்பவர்களும் கவலையை வெளியிடுகின்றனர். இயற்கைகள் அழிக்கப்படுவதன் காரணமாக உலகளாவிய ரீதியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அதிக வெப்பமான நிலையும் காணப்படுகின்றது.
இந்த சூழலில், பொறுப்பு மிக்க சமய நிறுவனங்கள் இவ்வாறு இயற்கையை அழிப்பதுடன், சட்ட விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றமையானது அவர்களின் பொறுப்பற்ற செயலையே காண்பிக்கின்றது.



