அசாம் மாநிலத்தின் ஹைலாகண்டி மாவட்டத்தில் பெய்த கடும் கனமழை காரணமாக ஜமீரா மற்றும் பைராபி இடையேயான ரயில் தண்டவாளப் பகுதியில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்குப் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டு மண் அரிப்பு உருவாகியுள்ளது.
இதனால் மிசோரம் மாநிலத்தின் பிரதான ரயில் போக்குவரத்தான பைராபி வழித்தடச் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சில்சார்-பைராபி, கவுகாத்தி-சைராங், சாய்ரங்-கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய பயணிகள் மற்றும் விரைவு ரயில்களின் சேவைகளைப் பகுதியாகவும் முழுமையாகவும் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே ரத்து செய்துள்ளது.
துண்டிக்கப்பட்ட வழித்தடங்களில் பயணிக்கும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், மாற்றுச் சாலைப் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிக்காகத் தேவையான கனரக இயந்திரங்கள் மற்றும் தொழில் நுட்பப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பல்வேறு நிலையங்களில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்குக் குடிநீர், சிற்றுண்டி மற்றும் தகவல்களை வழங்கக் கவுகாத்தி, லும்டிங் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



