கியூபெக்கைச் சேர்ந்த மூத்த கத்தோலிக்க மதகுருவான கார்டினல் மார்க் ஓயலெட் (Marc Ouellet) மீது சுமத்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கியூபெக் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கார்டினல் ஓயலெட் தொடர்ந்த அவதூறு வழக்கில், நீதிபதி மார்ட்டின் கஸ்டோங்குவே (Martin Castonguay), பமீலா குரோலோ (Paméla Groleau) என்பவருக்கு 100,000 கனேடிய டொலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
2008 முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், திருச்சபையில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது கார்டினல் ஓயலெட் தம்மை அனுமதியின்றி பலமுறை தொட்டதாக குரோலோ குற்றம் சாட்டியிருந்தார். எனினும், விசாரணையின்போது அவரது வாக்குமூலங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இறுதியில், குற்றம் சாட்டப்பட்ட சம்பவங்களில் ஒன்றை மட்டுமே பாலியல் அத்துமீறலாகக் கருதுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
2022ஆம் ஆண்டு கியூபெக் பேராயத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கூட்டு நடவடிக்கையிலும் ஓயலெட்டின் பெயர் இடம்பெற்றிருந்தது. அந்த வழக்கில் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையதாக இருந்த நிலையில், தமது பெயரும் அதனுடன் இணைக்கப்பட்டதால் தனது நற்பெயருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாக ஓயலெட் வாதிட்டிருந்தார்.
தீர்ப்பு வெளியான பின்னர், வழங்கப்பட்ட 100,000 டொலர் இழப்பீட்டுத் தொகையை தாம் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப் போவதில்லை என்றும், கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகளுக்கு அந்தத் தொகையை நன்கொடையாக வழங்கப் போவதாகவும் கார்டினல் ஓயலெட் தெரிவித்துள்ளார்.
தமது நற்பெயர் மற்றும் கௌரவத்தை மீட்டெடுப்பதற்காகவே இந்த அவதூறு வழக்கைத் தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கார்டினல் ஓயலெட் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு குற்றவியல் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

