உத்தரப்பிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தின் பிப்ரி காவல் எல்லைக்குட்பட்ட மனோரி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தயாரிப்பு ஆலையில் காலை சுமார் 11 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த கொடூர சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடி சிகிச்சைக்காக பிரயாக்ராஜில் உள்ள எஸ்.ஆர்.என் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் காவல்துறை, தீயணைப்புத் துறையினருடன் மனோரி விமானப்படை தளத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களும் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த வெடிவிபத்தின் தீவிரத்தால் ஆலையைச் சுற்றியிருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.
விபத்து நடந்த பகுதியின் அருகே அமைந்துள்ள டெல்லி-ஹவுரா ரயில் பாதையில் பாதுகாப்பு கருதி ரயில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டு, வந்தே பாரத் உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
மின் கம்பிகள் சேதமடைந்ததால் அப்பகுதியில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் பின்னணி குறித்து உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

