கியூபெக்கில் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை பாதிக்கும் மேலாக குறைக்கப் போவதாக Parti Québécois கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளமொண்டோன் தெரிவித்துள்ளார்.
தற்போது கியூபெக்கில் 5 லட்சத்துக்கும் அதிகமான தற்காலிக குடியேற்றவாசிகள் இருப்பதாகக் கூறிய அவர், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த எண்ணிக்கையை 2 லட்சம் முதல் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் குறைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
கியூபெக்கின் தற்போதைய குடியேற்ற எண்ணிக்கை, வீடமைப்பு மற்றும் அரசாங்கத்தின் பொது சேவைகளை வழங்கும் திறனை விட அதிகமாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணத் தேர்தல் பிரசாரம் ஆரம்பமாகி மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், குடியேற்ற விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
கியூபெக் நகரில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் முன்பாக பேசிய பிளமொண்டோன், குடியேற்ற முறையின் மீது மாகாண அரசாங்கம் முழுமையான கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு ஆளும் Coalition Avenir Québec கட்சியே பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் குடியேற்ற அமைச்சராக பதவி வகித்த தற்போதைய CAQ தலைவி கிறிஸ்டின் ஃப்ரெஷெட்டை நோக்கியும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.
இதனிடையே, பிளமொண்டோனின் திட்டத்திற்கு அவரது அரசியல் போட்டியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொதுப் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு குடியேற்றவாசிகளை குற்றம் சாட்டுவதாகவும், தற்காலிக குடியேற்றத்தை இவ்வாறு குறைப்பது கியூபெக்கில் ஏற்கனவே காணப்படும் தொழிலாளர் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கும் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
எனினும், தற்காலிக குடியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கையில் விவசாயம், உற்பத்தித்துறை மற்றும் சுகாதாரத்துறை போன்ற தற்காலிக தொழிலாளர்களை அதிகமாக நம்பியுள்ள துறைகள் பாதுகாக்கப்படும் என Parti Québécois தெரிவித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு பிராந்தியத்தின் தொழிலாளர் தேவைகளையும் கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அக்கட்சி கூறியுள்ளது.
அதேவேளை, நிரந்தர குடியேற்றத்தையும் ஆண்டுக்கு 45 ஆயிரம் என்ற தற்போதைய அரசாங்க இலக்கிலிருந்து 35 ஆயிரமாக குறைக்கப் போவதாக Parti Québécois மீண்டும் உறுதியளித்துள்ளது.
தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை தங்களது இலக்கை அடையும் வரை, வெளிநாடுகளில் இருந்து புதிய பொருளாதார குடியேற்றவாசிகளை தெரிவு செய்வதற்கு பதிலாக, ஏற்கனவே கியூபெக்கில் வசிக்கும் தற்காலிக குடியேற்றவாசிகளில் நிரந்தர குடியிருப்புக்கு தகுதியானவர்களை தெரிவு செய்யப் போவதாகவும் கட்சி தெரிவித்துள்ளது.
கியூபெக் மாகாணத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், குடியேற்றக் கொள்கை முக்கிய தேர்தல் விவகாரமாக மாறியுள்ளது.

