மன்னார் நகர சபைக்கு சொந்தமான சின்னக்கடை கிராம அலுவலர் பிரிவில் குருசு நகர் பகுதியில் அமைந்துள்ள குப்பை சேகரிக்கும் பகுதியில் நேற்று சனிக்கிழமை (22) மாலை ஏற்பட்ட தீ விபத்து பெரிய அளவில் பரவிய நிலையில் நீண்ட நேர போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
குறித்த தீயை கட்டுப்படுத்த மன்னார் நகர சபையின் தீயணைப்பு படை பிரிவு, இராணுவத்தின் 56 ஆவது படை பிரிவினரும் தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதேபோன்று வவுனியா மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனமும் வருகை தந்து தீ அனைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு , பிரதேச செயலாளர் , நகரசபை தவிசாளர் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரும், முப்படையினர் மற்றும் போலீசார் வருகை தந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அனைத்து தரப்பினரின் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் புகை வெளி வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் உள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ காரணமாக அப்பகுதி பல மணி நேரம் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
குறிப்பாக சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.

